முல்லைப்பெரியாறு அணை குறித்த அச்ச உணர்வு ஏன்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Why is there fear about the Mullaperiyar Dam? Supreme Court questions
28.1.2025
முல்லைப்பெரியாறு அணை உறுதி தன்மை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கை வேறு அமர்வு விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கையும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வுக்கே பரிந்துரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என்றும், எனவே அணையை ஆய்வு செய்து போதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, “நானும் கேரளாவில் வசித்துள்ளேன். நமது வயதை விட இருமடங்கு வயதிலும் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. 130 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறது. பல பருவ மழையை கண்டும் முல்லைப்பெரியாறு அணை இன்றும் உறுதியாக உள்ளதை நம்மால் காண முடிகிறது. அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
அணை விவகாரத்தில் அச்ச உணர்வு என்பது அடுத்து என்ன நடக்கும் என்ற காமிக்ஸ் கதைகளை போல் உள்ளது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.