நெல்லையில் மதுபோதையில் கல்லூரி மாணவர்களை மிரட்டிய போலீஸ்காரர்
1 min read
Policeman threatens college students while drunk in Nellai
29.1.2025
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு மானூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் எதிரே உள்ள மேஜையில் சாப்பிட வந்த 4 கல்லூரி மாணவர்களை பார்த்து, எதற்காக என்னை முறைத்து முறைத்து பார்க்கிறீர்கள். நான் யார் என்று தெரியுமா?. மரியாதையாக சென்று விடுங்கள். இல்லை என்றால் உங்கள் முகத்தை உடைத்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டாராம்.
இதுகுறித்து விசாரித்த போது அந்த போலீஸ்காரர் கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கல்லூரி மாணவர்களின் ஒருவரின் பெற்றோர் இதுபற்றி மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மது போதையில் கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ்காரர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.