ஊட்டி அருகே புலி தாக்கியதில் இளைஞர் சாவு
1 min read
Youth dies in tiger attack near Ooty
ஊட்டி,மார்ச்.28-
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்தவர் கேந்தர் குட்டன். தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்முன்தினம் வழக்கம்போல எருமைகளை மேய்க்கச் சென்ற கேந்தர் குட்டன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவரது உடல் அருகிலுள்ள வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.