கேரளாவில் கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
1 min read
Thiruvananthapuram airport closed for temple procession in Kerala
11/4/2025
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ‘பங்குனி ஆறாட்டு’ ஊர்வலத்தின்போது, சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படுகிறது.
இந்த ஊர்வலமானது திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்கிறது. இதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவில் ஆறாட்டு ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
அந்த வகையில், பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று பங்குனி ஆறாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 4 முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும் என்றும், இந்த சமயத்தில் விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவனந்தபுரம் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று விமான நிலையம் மூடப்பட்டது.