நெல்லையில் தங்க செயின் திருடிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது
1 min read
Petrol station employee arrested for stealing gold chain in Nellai
30.4.2025
நெல்லை மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 35), நேற்று முன்தினம் (28.04.2025) தேவர்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு சென்றுள்ளார். பின்பு சுப்பையாபுரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது தனது பையை பார்த்தபோது பையில் இருந்த தங்கச் செயினை காணவில்லை.
இதுகுறித்து பாண்டியராஜன் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் லூக் அசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தேவர்குளம் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் மானூர், வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜா (35) தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நேற்று (29.04.2025) முத்துராஜாவை கைது செய்தார். மேலும் அவர் முத்துராஜாவிடமிருந்து தங்க செயினை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.