ஏ.டி.எம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும்
1 min read
ATMs, digital transactions will function as usual – Public Sector Banks inform
9.5.2025
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகள் தங்கள் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படுவதாகவும், நன்கு செயல்படுவதாகவும், டிஜிட்டல் சேவைகள் சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் நாட்களில் ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஎம் உள்பட அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குவதாக எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
“எங்கள் அனைத்து ஏடிஎம்கள், சிடிஎம்கள்/ஏடிடபிள்யூஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முழுமையாக செயல்படுகின்றன மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன” என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,” பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
இதே போன்ற செய்திகளை பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது எக்ஸ் தள பக்கத்தில்,”எங்கள் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உங்கள் வீட்டில் இருந்தபடியே தடையற்ற வங்கி அனுபவத்தை பெறலாம்,” என்று குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.