மனைவியின் கள்ளக்காதலால் மூன்று பேரை கொலைசெய்த கணவர்
1 min read
Husband kills three people for cheating on his wife
15.5.2025
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஷ்மிதா என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பாலுவின் உறவினரான எதிர் வீட்டில் வசிக்கும் விஜய் என்ற வாலிபருடன் புவனேஸ்வரிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் புவனேஸ்வரி தனது கணவனை பிரிந்து வாலாஜா கீழ் புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் 9 மாதங்களாக வசித்து வருகிறார்.
இதற்கிடையே புவனேஸ்வரி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்து பாலு ஆத்திரத்தில் நேற்று இரவு கீழ் புதுப்பேட்டை சென்று புவனேஸ்வரியை வெட்ட முயற்சித்துள்ளார். வீட்டிலிருந்த அவரது தாய் புவனேஸ்வரியை வீட்டை விட்டு ஓடி விடுமாறு சொல்லி கேட்டை சாத்தியுள்ளார்.
அந்த ஆத்திரத்தில் மாமியார் பார்வதியை பாலு கத்தியால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து பைக்கில் புது குடியானூர் வந்தவர் ஆத்திரத்தில் விஜயின் தந்தை அண்ணாமலை, தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்புராடால் அடித்து கொலை செய்துள்ளார். 3 பேரை கொலை செய்த பாலுவை கொண்டபாளையம் போலீசார் கைது செய்தனர்.