தேர்வில் தோல்வியால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
1 min read
Class 11 student commits suicide after failing in exam
17.5.2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் யோகபாபு (17) என்பவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான 11-ம் வகுப்பு தேர்வு முடிவில் யோகபாபு 273/600 மதிப்பெண்கள் எடுத்தும், வணிகவியல் பாடத்தில் தோல்வியுற்றார். இதனால் விரக்தி அடைந்து மனம் உடைந்து காணப்பட்ட யோகபாபு நேற்று மாலை கொடைரோடு அருகே திண்டுக்கலில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற தேஜஸ் ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைரோடு இருப்பு பாதை காவல் துறை சார்பு ஆய்வாளர் அருணோதயம், யோகபாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து, மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.