ஐதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி
1 min read
17 killed in Hyderabad fire
18.5.2025
ஆந்திர மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே குல்சார் பேர்ல்ஸ் குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக காலை 6.30 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீயின் தாக்கத்தால் பலர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி உள்ள சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீவிபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி அளித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொலைபேசியில் பேசி, அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.