ஆபரேஷன் சிந்தூர் குறித்து புது வீடியோ வெளியீடு
1 min read
New video released on Operation Sindoor
18.5.2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதற்கு இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுக்க அதனை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என நமது நாட்டு ராணுவ டிஜிஎம்ஓ.,விடம் பாகிஸ்தான் கெஞ்சியது. இதன் பிறகு இரு தரப்பும் ஒப்புக் கொண்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, ஆப்பரேஷன் சிந்தூர் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, ‘ ஆப்பரேஷன் சிந்தூர்’ தொடர்பாக புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.’திட்டமிடல், பயிற்சி, மற்றும் செயல்படுத்துதல், நீதி நிலைநாடப்பட்டது’ என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் பேசிய ராணுவ வீரர் ஒருவர், பஹல்காம் தாக்குதல் முதல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை துவங்கியது. இது கோபம் அல்ல. பாடம் புகட்டுவதற்கானதீர்மானம். எதிர்காலத்தில் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இது தான் நீதி. பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.’ எனக்கூறியுள்ளார்.