செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நூலகம்
1 min read
Library at Sengottai Government Hospital
11.6.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கேற்றி நூலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை வகித்தார். செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் டாக்டர் டி. ஆர். எஸ்.முத்துராமன், ரோட்டரி செயலாளர் திலீப்சேகர், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் செல்வகணபதி, பெரியபிள்ளை வலசை பஞ்சாயத்து தலைவர் பொறியாளர் க. இ.வேலுச்சாமி, செங்கோட்டை நூலகத்தின் மூத்த நூலகர் கோ. இராமசாமி, செங்கோட்டை நூலகத்தின்
போட்டி தேர்வாளர் விடியல் சேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை அரசு மருத்துவமனை மூத்த ஆய்வக நுட்பனர் ஹரிஹர நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவில் செங்கோட்டை அரசு மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிறிய அளவில் ஒரு நூலகம் செயல்பட்டு வந்தது. அண்மையில் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருகை வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரைப்படி தற்போது அந்த நூலகம் நிரந்தர நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார பத்திரிகைகள், நாவல்கள் மற்றும் பல புதிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நாளை முதல் வரவு வைக்கப்பட்டு படிப்பதற்கு ஏதுவாக வைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கேட்டுக்கொண்டார். முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார்.