திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
1 min read
Thiruchendur Murugan Temple Kumbabhishekam Celebration
7.7.2025
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் இன்று (ஜூலை 7) காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை 6 30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷே க நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.