விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா
1 min read
Subhanshu Shukla watched the sunrise 230 times in space
11.7.2025
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
14 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தங்கள் கடைசி பணி ஓய்வுநாளையும் எடுத்துக்கொண்டனர். தற்போது பூமிக்கு திரும்புவது குறித்த நாசாவின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக ஆக்சியம் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.
அதில் மேலும், ‘பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60-க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்’ என கூறப்பட்டு இருந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230-க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது. மேலும் சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது.