Madapuram youth murder: Remand of 5 arrested policemen extended
15/7/2025 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளி கோயில் காவலாளி நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக மதுரை ஐகோர்ட் கிளை நியமனம் செய்தது இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி கடந்த 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து விசாரணை நடத்த ஏதுவாக, விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியுள்ளது.
இதற்கிடையே , காவலாளி அஜித்குமாரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 5 போலீசாரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிந்த நிலையில், காவலர்கள் ஐந்து பேரும் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்படனர். இதையடுத்து, நீதிமன்றக் காவலை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய இடம், நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா இருந்த அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.