August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

கடலூர்: ரெயில்வே கேட் கீப்பர் பணி நீக்கம்

1 min read
Cuddalore: Railway gatekeeper dismissed 
16.7.2025
கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கிராசிங்கை கடலூர் மருதாடு பகுதியில் இயங்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளி வேன் ஒன்ரு கடந்த 8ம் தேதி முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜயசந்திரகுமார் மகன் நிமிலேஷ் (12) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) ஆகியோர் காயமடைந்தனர்.

விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.

இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரெயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரெயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து, அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரெயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரெயில்கள் வரும் நேரங்களில் அவர் ரெயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *