Recognition received by Chennai Metro Rail Corporation 19.7.2025 சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நிலையான வளர்ச்சியின் தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் பணிமனை, இந்திய பசுமை கட்டுமான கவுன்சிலிடமிருந்து (IGBC) மதிப்புமிக்க "தங்க மதிப்பீட்டை" பெற்றுள்ளது. பணிமனையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளை எடுத்துக்காட்டும் வகையில் "பசுமை தொழிற்சாலை கட்டிடம்" பிரிவின் கீழ் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்திய பசுமை கட்டுமான கவுன்சில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் 1 நீட்டிப்பில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச்சான்றிதழை ஏற்கனவே வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நீல வழித்தடத்தில் 33,918 சதுர மீட்டர் பரப்பளவில் உயர்மட்ட வழித்தடத்தில் அமைந்துள்ள விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரெயில்களை பராமரிப்பது உட்பட 16 ரெயில் பாதைகள், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சி வசதி மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் இந்த பணிமனை கட்டப்பட்டுள்ளது. இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க மதிப்பீட்டைப் பெறுவதற்கு உதவிய பல முக்கிய பசுமை அம்சங்கள்;
மேம்பட்ட நீர் சேமிப்பு: 80% மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்தி தானியங்கி மெட்ரோ இரயில் சுத்தம் செய்யும் ஆலையை கொண்டுள்ளது. இது நன்னீர் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கிறது.
கழிவுநீர் மறுபயன்பாடு: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீரைச்சுத்திகரித்து, அதை நீர்ப்பாசனம் மற்றும் கழிப்பறை பயன்பாட்டிற்கு மீண்டும் பயன்படுத்துகிறது.
நிலையான தள மேலாண்மை: விம்கோ நகர் பணிமனையின் உட்புறச் சாலைகள் 7.5 மீட்டர் அகலத்தில் மழைநீர் வடிகால்களுடன் அமைக்கப்பட்டுள்ளன, இது வளாகம் முழுவதும் திறமையான நீர் மேலாண்மையை உறுதி செய்கிறது. கூட்டமைப்பின் (CII - Confederation of Indian Industry) ஒரு பகுதியானஇந்திய பசுமை கட்டுமான கவுன்சில் இந்தியாவில் பசுமை கட்டிட சான்றிதழுக்கான முதன்மையானஅமைப்பாகும். இது நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும் பல்வேறு திட்ட வகைகளுக்கான மதிப்பீட்டு அமைப்புகளை வழங்குகிறது.
இந்திய பசுமைக் கட்டுமான கவுன்சில் "பசுமைத் தொழிற்சாலை கட்டிட மதிப்பீடு" என்பது ரெயில் அடிப்படையிலான எம்.ஆர்.டி.எஸ். (Mass Rapid Transit System) திட்டங்களின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாடுகளில் பசுமைக் கருத்துக்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது.
இது தள தேர்வு மற்றும் திட்டமிடல், நீர் திறன், ஆற்றல் திறன், பொருள் பாதுகாப்பு, உட்புறச் சூழல் மற்றும் வசதி, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் புதுமை போன்ற பசுமை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறது. பசுமைக் கட்டிட தொழிற்சாலை மதிப்பீட்டைப் பெற, ஒருதிட்டம் கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் குறைந்தபட்ச கடன் புள்ளிகளை அடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.