Devotees waited for 7 hours at the Tiruchendur temple to have darshan 21.7.2025 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் நாளாகும். இந்த நாள் மிக சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அதுவும் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகனை வழிபடக்கூடிய உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஜதீகம்.
அந்த வகையில் இன்று ஆடி கிருத்திகை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். வழக்கமாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு ஜெயந்திரநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.