June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்-17 பேர் பலி

1 min read

Village submerged in flash floods in Uttarakhand – 17 dead

6.8.2025
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாவும், மண்ணில் பலர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது.

உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த வெள்ளம் தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் நேற்று மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது பெய்து வரும் இந்த பருவமழையால் உத்தரகாண்டில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலத்த நீரோட்டங்கள் பாய்கின்றன. நேற்று ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் பலத்த நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஜியாகட் அருகே பெரிய ஓடையில் இரண்டு பேர் மூழ்கி இறந்தனர்.

இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *