மாநில கல்விக் கொள்கை அறிவிப்பு; “இனி பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது”
1 min read
State Education Policy Announcement; “No more Plus-1 public exams”
8.8.2025
மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், கல்வி வளர்ச்சிக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது.
தொடர்ச்சியான திறன் அடிப்படையிலான அகமதிப்பீடுகள் மூலம் பாடப்பொருள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்கள் 11-ம் வகுப்பில் பயிலும் ஆண்டினை அவர்களை ஆயத்தப்படுத்தும் மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாகக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தைக் குறைக்க உதவுவதோடு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாகத் தயாராவதை உறுதி செய்து, அவர்கள் பாடக்கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தும். மேலும், இது மேல்நிலை வகுப்புகளில், சமநிலையான, மாணவர் நேய மதிப்பீட்டு அமைப்பினையும் மேம்படுத்தும்.
மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, பாடக் கருத்துகளைப் புரிந்து கொண்டமை, பெற்ற அறிவினை புதிய சூழல்களில் பயன்படுத்துதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மதிப்பிடும் வகையில் பொதுத் தேர்வுகளை சீரமைக்க வேண்டும்.
வாய்மொழித் தேர்வுகள், செயல்முறைத் தேர்வுகள், குழுச் செயல்பாடுகள், செயல்திட்டப் பணிகள் போன்ற பலதரப்பட்ட கூறுகளை கொண்டதாக மதிப்பீட்டு முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
கல்வித் தரநிலைகளைப் பேணும் அதே நேரம் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.