5 மாதங்களில் 7 லட்சம் பேருக்கு பட்டா- முதலமைச்சர் பேச்சு
1 min read
Pattas for 7 lakh people in 5 months – Chief Minister’s speech
9.8.2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அருகே உள்ள பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
பல்லாவரத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன்.
கல்வியும் மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக உள்ளன.
சென்னை புறநகர் பகுதியில் மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது.
ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் தான். மனிதனின் அடிப்படை தேவையான உடை, உணவு எளிதாக கிடைத்தாலும் இருப்பிடம் கிடைப்பதில்லை.
பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன். 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம்.
ரூ.1,672 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டாக்களை தற்போது வழங்கி உள்ளேன்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் ஆட்சிக்கு பின் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்.
வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார். அடிப்படை தெரியாத அறிவிலிபோல் அறிக்கை வெளியிடுகிறார்.
மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.
இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின், பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.