வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம்- தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
1 min read
Don’t insult voters – Election Commission instructs
14.8.2025
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் கையிலெடுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டு என்பது தவறான கருத்து என்று கூறியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில், “வாக்குத் திருட்டு போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்தி தவறான கருத்தைப் பரப்ப முயல்வது, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையைப் புண்படுத்துவதும் ஆகும். தேர்தலில் இரண்டு முறை வாக்களித்ததற்கு ஆதாரம் இருந்தால், பிரமாணப் பத்திரத்துடன் ஆணையத்திடம் பகிரலாம்” என்று தெரிவித்துள்ளது.