தூத்துக்குடியில் நண்பனை அடித்துக் கொன்ற கும்பல்
1 min read
Gang beats friend to death in Thoothukudi
21.8.2025
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் விஜய் என்ற பானை விஜய் (வயது 22). இவருடைய நண்பர்கள் பூபாலராயர்புரம் 2-வது தெருவை சேர்ந்த மகராஜா மகன் முத்துக்குமார் (22), ரபேல் மகன் மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் சுனாமி நகரை சேர்ந்த ரீகன்பிரபு மகன் முத்துகவுதம் (21).
இவர்கள் 4 பேரும் தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் ரோட்டில் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் வைத்து நேற்று முன்தினம் இரவு மதுக்குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவர்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், முத்துகவுதம், மரிய பெடலிஸ் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து விஜயை உருட்டு கட்டையால் அடித்தும், காலில் அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, முத்துக்குமார், முத்துகவுதம், மரிய பெடலிஸ் சஞ்சய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.