மல்லை சத்யா, ம.தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – வைகோ அறிவிப்பு
1 min read
Mallai Sathya removed from all responsibilities of MDMK – Vaiko’s announcement
22.8.2025
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ. சத்யா கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கண்ணியத்தை சீர்குலைத்தும், கழகத் தலைமைக்கு எதிராக செயல்பட்டும் வருவதால், அவர் வகித்து வரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
கழகச் சட்டதிட்ட விதிகளின்படி அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் கழகத்தின் சட்டதிட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.