முதன்முறையாக சாதனை: ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு பரிசோதனை வெற்றி
1 min read
First-ever achievement: Integrated Air Defense System test success
24.8.2025
இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆனது, ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு ஒன்றை ஒடிசாவில் பரிசோதனை செய்து உள்ளது.
இந்த ஆயுத அமைப்பானது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஏவுகணைகள், ரேடார், லாஞ்சர்கள், தாக்குதல் மற்றும் வழிகாட்டு சாதனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் என விரிவான வான் பாதுகாப்புக்கான அம்சங்களை கொண்டிருக்கும்.
பரவலான வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்பு என்பது கூடுதல் அம்சம் ஆகும். இதனால், ஏவுகணை திட்டத்தில் மற்றொரு மைல்கல்லை இந்தியா எட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டில் முதன்முறையாக வான் பாதுகாப்புக்கான இந்த பரிசோதனை நடத்தி பார்க்கப்பட்டு உள்ளது.
இந்த சாதனையை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் இன்று அறிவித்து உள்ளார். இதனால், எதிரிகளின் வான்வழி தாக்குதலுக்கான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.