தி.மு.க.வை ஏன் இப்போது சீமான் விமர்சனம் செய்வது இல்லை – நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி
1 min read
Why is Seeman not criticizing DMK now – Actress Vijayalakshmi’s sensational interview
4.9.2025
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். 2011-ம் ஆண்டு புகார் அளித்தும் இன்று வரை அவருக்கு விடிவு கிடைக்கவில்லை. அவ்வப்போது, சீமானுக்கு எதிராக அவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போதும் ஒரு வீடியோவை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வை ஏன் இப்போது சீமான் விமர்சனம் செய்வது இல்லை. என்னுடைய வழக்கு சுப்ரீம் வரப்போகிறது. அப்படி இருக்கும்போது எப்படி தி.மு.க.வை விமர்சனம் செய்வார். விஜயலட்சுமிக்கு வக்கீல் கிடையாது, அதனால் தானாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிடும் என்று சீமான் கணக்குப்போட்டார். என்றைக்கு என்னுடைய வக்கீல் போய் விஜயலட்சுமிக்கு நான் வாதாடப்போகிறேன் என்று சொன்னாரோ, அன்றைக்குத்தான் சீமான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு ஓடினார். ஆயிரம்தான் இருந்தாலும் நாமெல்லாம் பங்காளிங்க. உங்கள் எதிரி விஜயை நான் பார்த்துக்கொள்கிறேன், நன்றாக அடிக்கிறேன். என்னைய கொஞ்சம் பார்த்து சுப்ரீம் கோர்ட்டில் அடிங்க என்று பம்மியிருப்பார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் அவருக்கு அவஸ்தை வந்தபோது, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் காலில் போய் விழுந்து, மானம் மரியாதையை எல்லாம்விட்டுவிட்டு, தெருத்தெருவாகப் போய் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறினார். ஆனால், இன்று வரை ஈழம் மலரவே இல்லை. இதை யாரும் சீமானிடம் கேட்டதே இல்லை. விஜயலட்சுமியை கூட்டிக்கொண்டு வந்தது தி.மு.க.தான் என்று மேடை மேடையாக கூறினார். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று பேசுகிறார். விஜயலட்சுமிக்கு மாதாமாதம் ரூ.50 ஆயிரம் கொடுப்பதை ஒத்துக்கொண்டால், விஜயலட்சுமி பாலியல் தொழிலாளி என்று கூறுகிறார். உலகத்திலேயே தேடினாலும் சீமான் போல டுபாகூர் கிடைக்காது. மீடியாவை, மக்களை, மனைவியை ஏமாற்றிக்கொண்டு, ஊரெல்லாம் டிராமா போடுகிறார். அவரை கஷ்டப்பட்டு வளர்க்க நினைப்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்க கஷ்டமே படாதீர்கள். இந்த மரங்களுக்கு மாநாடு, மாடுகளுக்கு மாநாடு என்று இவர் எதுக்கெல்லாம் மாநாடு போட்டாலும் என்னுடைய கண்ணீர் சீமானை நல்லா இருக்கவே விடாது. ஒரு நாளைக்கு தீர்ப்பு வரும் இல்லையா. அப்போது சீமானுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.