பாபர் மசூதிக்கு பதிலாக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் மசூதி கட்ட அனுமதி மறுப்பு
1 min read
Permission denied to build mosque at alternate site allotted to replace Babri Masjid
24/9/2025
1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3-ந் தேதி அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.
மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23-ந் தேதி அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.
மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.
உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.