விஜய் பாஜகவின் பிடியில் எப்படி இருப்பார்?- நயினார் நாகேந்திரன் பேட்டி
1 min read
Is Vijay in the grip of BJP? – Nainar Nagendran answers
2.10.2025
சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது மின் தடையை ஏற்படுத்தியது யார்? கூட்டத்தின் நடுவே செருப்பை வீசியது யார்? இந்த சம்பவத்தின்போது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை? எதற்காக பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்? கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு காரணம் என்ன?
முதல்-அமைச்சர் வரும்போது மட்டும் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது தவறு.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், வேலியே பயிரை மேய்வது போல திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இரு காவலர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?
இவ்வாறு அவர் கூறினார்.