சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்; விஜயலட்சுமி வழக்கு ரத்து
1 min read
Seeman apologizes unconditionally; Vijayalakshmi case dismissed
9.10.2025
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இந்த நிலையில், நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி, காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெறுவதாகவும் நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் பிரமான பத்திரத்தில் உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடிகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.