பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
1 min read
Anti-Corruption Department conducts surprise raid at Pavurchatram Sub-Registrar’s office
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக சர்மிளா என்பவர் இருந்து வருகிறார். இங்கு பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருகை தரும் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், இங்கு இருபதுக்கும் மேற்பட்ட புரோக்கர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் மூலமாக பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாலசுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரதா, சப் இன்ஸ்பெக்டர் ரவி, மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்றனர்.
அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தினார்கள் இதில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் கூடுதலாக இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.