தென்காசி: காவலர் வீரவணக்க நாள்-கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
1 min read
Tenkasi: Police Valor Day – Collector, SP participate
இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.அரவிந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த காவல்துறையினர் களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி தென்காசி மாவட்டம் ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கேகமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செ.அரவிந்த், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், மேலும் மறைந்த காவலர்களின் குடும்பத்தினர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்ட்டின் தலைமையிலான ஆயுதப்படை காவலர்களின் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க பணியின் போது தனது இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.