கரூர் சம்பவம்: சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
1 min read
Karur incident: FIR registered by CBI filed in court
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒரு நபர் விசாரணையையும், காவல்துறை சிறப்பு விசாரணையையும் நடத்தியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இது மட்டுமின்றி சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த குழுவில், தமிழகத்துக்காக நியமனம் செய்யப்பட்ட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யவும் குழு தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கிடையே சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரை பெற்றுக்கொண்ட நீதிமன்றம் அதனை மதுரை ஐகோர்ட்டிற்கு மாற்றலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தீபாவளி விடுமுறையை முடித்துக்கொண்டு சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.