எனது பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min read
There is no deficiThere is no deficiency in my security
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் நேரில் சென்று வரவேற்றனர்.
மேலும், பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடிசியா வளாகத்துக்கு சென்றார். அவர், அங்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனது பொது வாழ்க்கையை நான் கோவையில்தான் தொடங்கினேன். இதை கூறுவதில் பெருமை கொள்கிறேன். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும். விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். ஒரே நேரத்தில் முன்று மாநிலங்களுக்கு கவர்னராக பணியாற்றினேன். தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றினேன். தற்போது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளேன்.
முயற்சி நம்முடையது. முடிவு இறைவனுடையது என்றுதான் நான் பார்க்கிறேன். இந்த துணை ஜனாதிபதி என்பது எனக்கு கிடைத்த ஒரு மகத்தான மரியாதையாக நான் பார்க்கவில்லை. துணை ஜனாதிபதி பதவி எனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை அல்ல. உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், நம் கொங்கு மண்ணுக்கும், கோவை மாநகரத்திற்கும், கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன் என்று கூறினார்.
இதற்கிடையில், கோவையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் குளறுபடி என போலீசில் பாஜக புகார் அளித்துள்ளது. கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அத்துமீறியுள்ளனர். பாதுகாப்பு வளையம் மிகுந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் கோவை மக்கள்தான் எனக்கு பாதுகாப்பு என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.