குற்றாலம்: ரூ.1.54 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
1 min read
Courtallam: Tobacco products worth Rs. 1.54 lakh seized – one arrested
6.6.2026
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1,54,000 மதிப்பிலான 154 கிலோ புகையிலைப் பொருட்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபரை குற்றாலம் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அசோக்குமார், உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .
அந்த வகையில், கடந்த 05.06.2026 அன்று குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், சுப்பையா என்பவரது மகன் முத்துகுமார் (51) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 154 கிலோ எடை கொண்ட (மதிப்பு ரூ. 1,54,000/-) புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது குறித்தும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த முத்துக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.