வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
1 min read
President, Prime Minister pay homage to Vallabhbhai Patel’s statue
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.