4 புதிய வந்தே பாரத் ரெயில்கள் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min read
PM Modi inaugurates 4 new Vande Bharat trains
லக்னோ – சஹாரன்பூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லக்னோ – சஹாரன்பூர், பனாரஸ் – கஜுராஹோ, பிரோஸ்பூர் – டெல்லி மற்றும் எர்ணாகுளம் – பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரெயில்கள் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும்.
இதில் எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முதல் ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பு ஒரு முக்கிய காரணியாகும். இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற ரெயில்கள் புதிய தலைமுறை இந்திய ரெயில்வேக்கு அடித்தளமிடுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் அவற்றை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன” என்று கூறினார்.