தென்காசியில் எஸ்.ஐ.ஆர். விழிப்புணர்வு பேரணி
1 min read
SIR Awareness Rally in Tenkasi
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தென்காசி மாவட்ட நிருவாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட (மகளிர் திட்டம்) திட்ட அலுவலகம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெண்கள் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பேரணியில் எஸ்.ஐ.ஆரில் பங்கு பெறுவோம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற கருத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு. தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
பேரணியின் நிறைவில் தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் பேரணியில் கலந்து கொண்டு சுயஉதவிக்குழுப் பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு எஸ்ஐஆர் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.