குற்றாலம் அருவிகளில் இன்றும் குளிக்க தடை
1 min read
Bathing at Courtallam Falls still prohibited
தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பகலிலும் தண்ணீர் வரத்து குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் மழையின் வேகம் சற்று குறைந்து தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.