டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்
1 min read
Central government’s emphasis at all-party meeting in Delhi
டெல்லியில் இன்று (நவ.,30) அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (டிச., 1-ந் தேதி) தொடங்குகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா கிளப்பியிருந்த புயலுக்கு பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில் நடக்கவுள்ள முதல் கூட்டத்தொடர் இது. எனவே, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் சபையை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் நேற்று (நவ.,30) அனைத்துக் கட்சி கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் பார்லியில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, டெல்லியில் திமுக எம்பியான டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்துரைத்தோம். தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தேவையற்றது.
நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பார்லியில் குரல் எழுப்புவோம். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 6 மாதங்களாக வழங்கவில்லை. எஸ்ஐஆருக்கு தமிழக அரசின் எதிர்ப்பை பார்லியில் தெரிவிப்போம்,
இவ்வாறு அவர் கூறினார்.