கழுகுமலை அருகே பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை- 2 பேர் கைது
1 min read
School teacher hacked to death near Kalagumalai – 2 arrested
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே பள்ளி ஆசிரியர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 2 பேர்களைபோலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் (43). இவரது பூர்வீகம் குமரி மாவட்டம் நாகர்கோவில். சுதந்திரகுமாரின் சகோதரிகள் இருவரும், கரடிகுளத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரை திருமணம் செய்துள்ளனர்.
இதனால் சுதந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கரடிகுளம் அருகே சி.ஆர்.காலனியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்காக 5 மாதமாக விடுமுறை எடுத்து படித்து கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு சி.ஆர்.காலனியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தென்காசி மாவட்ட எல்கையான ஆலங்குளம்- பழங்கோட்டை சாலையில் சுதந்திரகுமாரை மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். சாலையோரம் கிடந்த சுதந்திரகுமார் சடலத்தை குருவிகுளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மதுபாட்டில்களும் கிடந்தது.
எனவே மர்மநபர்கள், போதையில் ஆசிரியர் சுதந்திரகுமாரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, கொலையாளிகள் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சுதந்திரகுமார் செல்போனில் கடைசியாக யார், யாரிடம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது அஜித்குமார் உள்பட இருவரிடமும் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சுதந்திரகுமாரை இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘சுதந்திரகுமாருக்கும், நாலாட்டின்புத்தூர் அருகே ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் அஜித்குமார் (28), 17 வயது சிறுவனுக்கும் இடையே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை சுதந்திரகுமார், கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் இருவரையும் வருமாறு கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுதந்திரகுமாரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு இருவரும் பதற்றத்தில் பைக்கை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனாலும், செல்போன் உரையாடலை வைத்தும் சிக்கிக்கொண்டனர்.
அஜித்குமார் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் இருந்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்’ என்றனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த குருவிகுளம் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.