அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார்; டிஜிபிக்கு அமலாக்கத்துறை இன்னொரு கடிதம்
1 min read
Minister K.N. Nehru accused of Rs. 1020 crore corruption; Enforcement Department writes another letter to DGP
8.12.2025
அமைச்சர் நேரு மீதான ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழக போலீஸ் டிஜிபிக்கு, அமலாக்கத்துறையினர், இரண்டாம் முறையாக கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் நேரு. இவரது துறையில் பணி நியமனத்துக்கு ஊழல் நடந்திருப்பதாக, ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அக்டோபர் 27-ந்தேதி புகார் அனுப்பியது.
விசாரித்து வழக்கு பதிவு செய்யும்படி அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் முறையாக அதேபோன்ற கடிதத்தை அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அனுப்பியுள்ளது. தன் உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை, அமைச்சர் நேரு கமிஷன் பெற்றுள்ளார் என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
மொத்தம் 1020 கோடி ரூபாய் மதிப்புக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, 252 பக்க கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட், லஞ்சம் கணக்கிடப்பட்ட விவரம், வெவ்வேறு வங்கிகள் மூலம் லஞ்சப்பணம் பரிமாறப்பட்ட விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, யாருக்கு ஒப்பந்தம் என்பதை முடிவு செய்து லஞ்சம் பெற்றதாக அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமுதாய கழிப்பறைகள், துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்குதல், நபார்டு திட்டங்கள், துப்புரவு பணியாளர் குடியிருப்பு, கிராமப்புற சாலைகள், குடிநீர் திட்டங்கள், ஏரி தொடர்பாக பணிகள் இவ்வாறு முறைகேடான டெண்டர்கள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.