செந்தில் பாலாஜி லஞ்ச வழக்கு; போக்குவரத்து அதிகாரியிடம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
1 min read
Senthil Balaji bribery case; Supreme Court bans questioning of transport officer
5/1/2026
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான லஞ்ச வழக்கில், சென்னை மாநகர போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் கணேசன் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், இத்துறையின் காலிப் பணியிடங்களை பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக புகார் எழுந்தது.
இதே விவகாரத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்து மேலாண் இயக்குநர் கணேசன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதற்கு எதிராக, கணேசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
செந்தில் பாலாஜி தொடர்பான முறைகேடு விவகாரத்தில் என் மீது தவறுதலாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. முதற்கட்டமாக என்னை வழக்கில் இணைக்காத நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு பின் சேர்த்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் என் தரப்பு கருத்துக்களை கேட்காமல் விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே எனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில், கணேசன் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனு தொடர்பாக அமலாக்கத்துறை நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.