திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; தமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி
1 min read
Tamil Nadu government’s appeal to light a lamp at the Thiruparankundram Deepathoon dismissed
6.1.2026
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30 மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் உள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். சண்டை போடக்கூடாது. தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.