கால்களில் மோதிரம், இறக்கையில் முத்திரையுடன் ஜம்முவில் பிடிபட்ட புறா
1 min read
Pigeon caught in Jammu with ring on its legs, stamp on its wing
11.1.2026
ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இங்கு ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.
அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.
சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்த மோதிரங்களில் ‘ரஹ்மத் சர்க்கார்’ மற்றும் ‘ரிஸ்வான் 2025’ என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.