தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி துணைத் தலைவிக்கு பொதுமக்கள் பாராட்டு
1 min read
Public praise for the vice-chairperson of Panpozhi Town Panchayat, Tenkasi District
18/1/2028
தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சியின் துணைத் தலைவி நாகலட்சுமி தனக்கு இதுவரை அரசு கொடுத்த மொத்த ஊதியத்தையும் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
2023ம் வருடம் ஜூலை மாதத்திலிருந்து பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், துணைத் தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்பூதியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 29 மாத ஊதியத்தை சேர்த்து, கூடுதலாக தனது சொந்த நிதியையும் போட்டு துணைத் தலைவி ஒருவர் தனது வார்டு பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதாவது, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பேரூராட்சியின் துணைத் தலைவியாக பதவி வகித்து வருபவர் நாகலெட்சுமி வெங்கட். சுயேச்சை வேட்பாளரான இவர் துணைத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவருக்கு கடந்த 2023-ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் பண்பொழி பேரூராட்சி நிர்வாகத்தால் மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் மதிப்பு ஊதியத்தை சிறுக, சிறுக சேமித்து ரூ. 1.45 லட்சம் பணத்துடன், தனது சொந்த பணத்தையும் சேர்த்து தனது வார்டு மக்கள் சந்தோஷமாக பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக பெரிய அளவிலான சில்வர் பாத்திரத்தில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொங்கலிட தேவையான பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
குறிப்பாக, தனது ஊதியத்தில் ஒரு ரூபாய் கூட தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுக்காமல் அதையும் மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி அனைவரது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.