கடையம் திருவள்ளுவர் கழகத்திற்கு வித்வான் நவனீதகிருட்டிணனார் விருது
1 min read
Kadayam Thiruvalluvar Kazhagam.
20.1.2026
கடையம் திருவள்ளுவர் கழகம் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. மாதந்தோறும் தமிழ் வல்லுநர்களை அழைத்து பேச வைக்கிறார்கள். ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த பேராசிரியர் அறிவரசன்(குமாரசாமி) அவர்கள் மூலம் வாரம்தோறும் முழுமையாக திருக்குறள் வகுப்பை நடத்தி சாதனை படைத்துள்ளது. மேலும் பல சமூகப்பணிகளையும் செய்துவருகிறது.
இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் கடையம் திருவள்ளுவர் கழகத்திற்கு திருநெல்வேலி தாமிரபரணி இலக்கிய மாமன்றம் வித்வான் நவனீதகிருட்டிணனார் விருது வழங்கியது.
இதற்கான விழா சங்கீத சபாவில் நடந்த தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 17-வது ஆண்டு தொடக்கவிழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இவிழாவின் ஒரு பகுதியாக பிறமொழி கலக்காது தூய தமிழில் பேசும் போட்டி “நல்ல தமிழில் நின்று பேசு” என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தப்போட்டிக்கு கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி நடுவராக இருந்தார். ஒருங்கிணைப்பாளராக சிவசெல்வமாரிமுத்து, கவிஞர் பிரபு, மருத்துவக்கல்லூரி மாணிக்கவாசகம் ஆகியோர் இருந்தனர்.
ஆங்கிலத்தில் ஒரு சம்பவம் கொடுக்கப்பட்டு அதை தூய தமிழில் பேசும்போட்டியில் கவிஞர் சக்திவேலாயுதம் முதலிடம் பெற்றார். அம்பை தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் லட்சுமணன் இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி எழுத்தாளர் சாந்திபிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு லயன்பேருந்து அதிபர் ரமணி தலைமை தாங்கினார். மாமன்ற அமைப்பாளர் கவிஞர் பாமணி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகத்திற்கு வித்வான் நவனீதகிருட்டிணனார் விருது வழங்கப்பட்டது. இதனை கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம், செயலாளர் கே.எஸ்.கல்யாணிசிவகாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
புத்தனேரி செல்லப்பாவிற்கு அ.மு.சுந்தரவிநாயகனார் விருது, நெல்லை குரலோனுக்கு புலவர் புலமைபித்தன் விருது, நூலகர் அகிலன் முத்துக்குமாருக்கு தளவாய் ராமசாமி பொருநை விருது, திரிபுரசுந்தரிக்கு செஞ்சொல் அரசி விருது, பொட்டல்புதூர் தில்லை மணியனுக்கு சீர்கவித் தென்றல் விருது, புலவர் கந்தகுமாருக்கு தலபுராணவித்தகர் விருது, வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சங்கீத சபை செயலாளர் ஆறுமுகம் வழங்கினார். முத்துகுமார் நன்றி கூறினார். சரவணகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.