தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி ரஜினிகாந்த் தங்கச் சங்கிலியை பரிசு
1 min read
Rajinikanth awards gold chain to sanitation worker in appreciation of his honesty
3.2.2026
சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தி.நகர் வண்டிக்காரன் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. வறுமையில் வாடினாலும், நேர்மை தவறாத பத்மா, உடனடியாக தங்க நகைகள் இருந்த அந்த பிளாஸ்டிக் கவரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனை செய்ததில், அதில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தங்க நகைகளை தொலைத்ததாக முன்பே புகார் அளித்தது கண்டறியப்பட்டது. அவர் அளித்த ஆவணங்கள் சரிபார்த்த பின்னர், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப்பணியாளர் பத்மாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.
தூய்மைப்பணியாளர் பத்மாவை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், பரிசுத்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூய்மைப்பணியாளர் பத்மாவை நேரில் வரவழைத்து பாராட்டியதோடு, அவருக்கு தங்கச் சங்கலியை பரிசாக வழங்கினார்.