என்.எல்.சி. ஒப்பந்தங்களில் முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
NLC. Complaints of irregularities in contracts – CBI. High Court orders investigation
12.2.2026
என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் சுமார் ரூ.442 கோடிக்கு முறைகேடு நடந்ததாக கூறி கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தனது புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில், “புகார்தாரர் தனது புகார் தொடர்பாக முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அவரை விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முகாந்திரம் இல்லாமல் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று கூறி, என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டார். மேலும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.