டெல்லியில் ‘ஏஐ’ உச்சி மாநாட்டை பிரதமர் மோடிதொடங்கி வைத்தார்
1 min read
PM Modi inaugurates AI Summit in Delhi
16.2.2026
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஏஐ தாக்கம் உச்சி மாநாட்டுடன் இந்திய ஏஐ தாக்கம் கண்காட்சி 2026ம் இதே மண்டபத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், ஏஐ மாநாட்டு அரங்கை பிரதமர் மோடி பார்வையிட்டார்.ஏஐ துறையில் மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், சர்வதேச பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் நிகழ்வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏஐ கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.
ஏஐ கண்காட்சியில் நேரடி செயல் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் 600-க்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
அதேபோல், ஏஐ உச்சி மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். அதேபோல், ஏஐ உச்சி மாநாட்டில் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சம் அல்ட்மென் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.