டிஆர் பாலுவிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையில் நல்ல அனுபவம்-அண்ணாமலை பேட்டி
1 min read
Good experience in cross-examining TR Balu in court – Annamalai interview
17.2.2026
டி.ஆர்.பாலுவிடம் நீதிமன்றத்தில் வாதாடியது நல்ல அனுபவம். கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. குறுக்கு விசாரணை முடியவில்லை. இன்னும் தொடரும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
நேற்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நல்ல அனுபவம். நம்முடைய வழக்கை நீதிமன்றத்தில் நாம் வாதாடும் போது தான், அது எவ்வளவு கஷ்டமான வேலை, எவ்வளவு தயார் ஆக வேண்டும். எந்தளவுக்கு நம்முடைய வழக்கறிஞர்கள் கறுப்பு உடை அணிந்து ஒரே நாளில் 5,6 வழக்குகளை வாதாடுகின்றனர். நாம் ஒரு வழக்கில் தான் வாதாடுகிறோம். எனக்கு வழக்கறிஞர்கள் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை அதிகமாகி இருக்கிறது. அதேபோல் எனக்கும் ஒரு நல்ல அனுபவம். கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. குறுக்கு விசாரணை முடியவில்லை. இன்னும் தொடரும்.
டிஆர்பாலுவிடம் நேற்று 2004ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை அவர்கள் ஆட்சியில் இருந்ததை மட்டும் தான் பேசினோம். இன்னும் நிறைய விஷயம் பேசாமல் இருக்கிறது. அவர்களது குடும்பம், குழந்தைகள் பற்றி பேச வேண்டும். டிஎம்கே பைல்சில் நாம் மொத்தமாக டிஆர்பாலு மற்றும் அவர்களது குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறோம். அவை அனைத்தையும் பற்றியும் வரும் காலத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். திமுக அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது. திமுக அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
2027 மார்ச் 31ல் தமிழகத்தின் மொத்த கடன்தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்க திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை. வெறும் ரூ.82 கோடி மட்டுமே கோவில்கள் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது திமுக அரசின் பட்ஜெட். திமுகவின் சுயபுராணமாக இருந்த தமிழக பட்ஜெட்டில் பிரயோஜனமாக எதுவும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.