மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்
1 min read
Organs of brain-dead 8-year-old girl donated to 4 people
25.2.2026
கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவருமாக இருப்பவர் சந்தோஷ் என்ற சோமு.
இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த திங்கட்கிழமை வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமு தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக ஆப்ரேஷன் செய்வது என்பது பெரும் சிக்கலான விஷயம் என்று கூறினர். இருப்பினும் ஆபரேஷன் செய்து பாருங்கள் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கவே, சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், தோள், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.